சினிமா பாணியில் அடுத்தடுத்து திருமணம் செய்தவர் தற்கொலை வாலிபர் உடலை வாங்க வந்த 3 மனைவிகள்: புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரி: புதுவை, ரெட்டியார்பாளையத்தில் பியூட்டி பார்லர் ஊழியர்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை வாங்க 3  மனைவிகள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.   தர்மபுரி மாவட்டம் தடங்கம், காளிகவுண்டன் வீதியைச் சேர்ந்தவர் சிங்காரவேலு  (32). அழகு கலை நிபுணரான இவர், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தனது அத்தை மகள்  சத்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வேலை நிமித்ததாக  அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று தங்கி பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே முதல் மனைவிக்கு தெரியாமல் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தனலட்சுமி  என்பவரை 2வதாக திருமணம் செய்துள்ளார். அவருக்கும் 2  குழந்தைகள் உள்ள நிலையில் மதுரையில் வசிக்கும் பெற்றோரை இழந்த காவியா  என்பவரை காதலித்து 3வதாக திருமணம் செய்துள்ளார்.

அவருடன் தனிக்குடித்தனம் நடத்த கடந்த 20 நாட்களுக்கு  முன்பு புதுச்சேரி வந்த அவர், ரெட்டியார்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு  பியூட்டி பார்லரில் வேலை செய்துள்ளார். மேலும் பூமியான்பேட்டை, ஜவஹர் நகர்  குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார்.  இதைத்  தொடர்ந்து காவியாவை குடும்பம் நடத்த புதுச்சேரிக்கு அழைத்த நிலையில் அவர்  சில கெடுபிடிகளை விதித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு  தனது 2வது மனைவியை சந்தித்த சிங்காரவேலு அவரது தாலி செயினை பறித்து  தகராறில் ஈடுபட்டு புதுச்சேரி வந்தாராம். அப்போதும் 3வது மனைவி குடும்பம்  நடத்த புதுச்சேரிக்கு வரமறுத்து தன்னை பதிவு திருமணம் செய்யும்படி வற்புறுத்தியதாக தெரிகிறது.

 இதுதொடர்பாக அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. இதில்  விரக்தியடைந்த சிங்காரவேலு நேற்று முன்தினம் குடிபோதையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து ரெட்டியார்பாளையம் போலீசார் சிங்காரவேலுவின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். பின்னர் அவரது செல்போனில் இருந்த நம்பர்களை தொடர்பு கொண்டு  தர்மபுரியில் உள்ள உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். அப்போது 3 மனைவிகள் பேசியதால் போலீசார் திகைத்தனர். இருப்பினும் அவர்களை புதுச்சேரி வருமாறு கூறினர்.  அதன்படி 3  மனைவிகளும் சிங்காரவேலுவின் உடலை வாங்க கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனை சவக்கிடங்கிற்கு நேற்று வந்திருந்தனர். அப்போது “நான்  அவனில்லை” சினிமா படபாணியில் ஒவ்வொருவருக்கும் தெரியாமலேயே சிங்காரவேலு 3  பேரை திருமணம் செய்திருப்பது தெரியவரவே சத்யா, தனலட்சுமி, காவியா ஆகியோர்  அதிர்ச்சியடைந்தனர்.

 சிங்காரவேலு சடலத்துக்கு 3 மனைவிகளும் உரிமை கோரிய  நிலையில், காவல்துறை இவ்விவகாரத்தில் அவசர முடிவை எடுக்க முடியாது,  சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ள மனைவி அல்லது அவரது பெற்றோரிடம்  மட்டுமே உடலை கொடுக்க முடியும் என தெரிவித்தனர். இதனால் காவியா அழுதுகொண்டே திரும்பி சென்றார். மற்ற 2 மனைவிகளும் சவக்கிடங்கில்  தொடர்ந்து காத்திருந்தனர். இறுதியில் முதல் மனைவி சத்யாவிடம் அவரது உடலை  போலீசார் ஒப்படைத்தனர். தற்கொலை செய்த கணவரின் உடலை பெற 3 மனைவிகள் வந்த  சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: