மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து, பல்வேறு குடிநீர் திட்டங்களுக்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது குடிநீர் தேவை அதிகரித்துள்ளதால், நேற்று முன்தினம் காலை முதல் குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், நேற்று முன்தினம் விநாடிக்கு 232 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 206 கனஅடியாக குறைந்தது. இதன் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 41.46 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 41.15 அடியானது. நீர் இருப்பு 12.69 டிஎம்சி. கடந்த ஆண்டு ஜூலை 15ல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 45,316 கனஅடியாகவும், நீர்மட்டம் 83.20 அடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது