×

2020-21ம் கல்வியாண்டிலிருந்து வேலைவாய்ப்பு திறன் குறைந்த படிப்புகளுக்கு அனுமதியில்லை: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: அடுத்த கல்வியாண்டிலிருந்து, வேலைவாய்ப்பு திறன் குறைந்த புதிய வழக்கமான படிப்புகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அனுமதி வழங்காது என மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறி உள்ளார். மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பேசிய காங்கிரஸ் எம்பி சசிதரூர், ‘‘60% பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் உள்ளனர். சில வேலைகள் படிப்புக்கு சம்பந்தமில்லாததாக இருக்கிறது. எனவே பொறியியல் கல்லூரிகளில் சரியான திறன் வழங்கப்படுகிறதா? தொழில் துறையின் தேவைக்கும், பொறியியல் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் படிப்புகளுக்கும் இடையே பெரும் இடைவெளி நிலவுகிறது. இந்த இடைவெளி நீக்கப்பட வேண்டும்.  இதை நீக்கிவிட்டால், ‘பக்கோடா விற்று வேலைவாய்ப்பை பெருக்க முடியும்’ என்பது போன்ற அறிவுரைகள் மாணவர்களுக்கு அவசியமிருக்காது’’ என்றார்.

இதற்கு பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறியதாவது: பொறியியல் படிப்புக்கான பாடத் திட்டங்களை ஏஐசிடிஇ மறுஆய்வு செய்து, விரைவில் புதுப்பிக்கும். வரும் 2020-21ம் ஆண்டு கல்வியாண்டில் இருந்து குறைந்த வேலைவாய்ப்பு திறன் கொண்ட புதிய வழக்கமான துறைகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. மேலும், செயற்கை நுண்ணறிவு, பிளாக் செயின், இன்டர்நெட் ஆப் திங்ஸ்,  டேட்டா சயின்ஸ், சைபர் பாதுகாப்பு, 3டி பிரின்டிங் போன்ற நவீன தொழில்நுட்ப துறைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

தொழிற்துறையின் தேவைகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் படிப்புகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க மாணவர்களுக்கு தொழில் பயிற்சி கட்டாயமாக்குவது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் ஒரு அங்கமாக செயல்பட முடியும். தற்போது உலகின் 500 சிறந்த நிறுவனங்களில் 200ல் ஐஐடி மாணவர்கள் பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.


Tags : 2020-21 academic year, employment potential, central government
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...