ஆலந்தூர்: சென்னை ஆலந்தூர் 165வது வார்டுக்கு உட்பட்ட வாணுவம்பேட்டையில் 100 ஆண்டுகள் பழமையான மயானம் உள்ளது. தற்போது இதை சென்னை மாநகராட்சி சார்பில் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் பகுதியாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இந்த மயான பூமியில் பிணத்தை புதைக்கவோ, எரிக்கவோ கூடாது. ஆதம்பாக்கம், பாலகிருஷ்ணபுரம் மற்றும் ஆதம்பாக்கம் கண்ணன் காலனியில் உள்ள மின் எரிமேடையில்தான் பிணங்களை எரிக்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை மற்றும் முத்தியால் ரெட்டி தெரு, இந்திரா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் ஆதம்பாக்கம் 100 அடி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.