கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகரில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை ஆலயத்தின் 46வது ஆண்டு தேர் திருவிழா ஜூலை 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி நாள்தோறும் ஆலயத்தில் பங்குதந்தையர்கள் தலைமையில் திருப்பலி பூஜைகளும், மறையுரைகளும் நிகழ்த்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாலை நேரங்களில் தேவாலயத்தை சுற்றி சிறிய தேர் பவனி நடைபெற்று வந்தது. தேர்த்திருவிழாவின் கடைசி நாளான நேற்று காலை 8 மணிக்கு தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருபலி நடைபெற்றது.
நேற்று மாலை 7 மணியள வில் வண்ண, வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் பெரிய தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நகர் வலம் வந்தது. இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக திருத்தேரின் மீது உப்பு, மிளகு மற்றும் மலர்களை தூவி நேர்த்திக்கடன் செலுத்தினர்.