மேட்டூர் அருகே பரபரப்பு: சாலையை சீரமைக்க கோரி அரசு பேருந்து சிறைபிடிப்பு

மேட்டூர்: மேட்டூர் அருகே சாலையை சீரமைக்க கோரி, அரசு பேருந்து சிறைபிடிக்கப்பட்டது. இதனால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள கோனூர் ஊராட்சியில் ஆண்டிக்கரை, கல்லுக்கிணறு, மல்லக்கவுண்டர்தெரு, மங்கானூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் வசித்து வருகின்றனர். கிராம மக்களின் வசதிக்காக தினமும் அப்பகுதியில் 5 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் கிராமங்களுக்கு ெசல்லும் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளதால், அரசு பேருந்துகள் பாதியிலேயே நிறுத்தப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். தொடர்ந்து டூவீலரிலும் செல்ல முடியாத நிலையும் நிலவுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து, கல்லுக்கிணறு பகுதி மக்கள் 30க்கும் மேற்பட்டோர் மேட்டூரில் இருந்து ஆண்டிகரை நோக்கி சென்ற அரசு பேருந்தை இன்று காலை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த தகவலறிந்து வந்த கருமலைக்கூடல் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதன்பேரில் பொதுமக்கள் பேருந்தை விடுவித்து, அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் 2 மணிநேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. பேருந்தில் இருந்த பள்ளி, கல்லூரி மாணவிகள் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

Related Stories: