தாம்பரம்: தாம்பரத்தில் காஞ்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி மற்றும் அரிமா சங்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரூபி மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேரு பள்ளிகளுக்கு மின் விசிறிகள், பிரிண்டர் இயந்திரங்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான கல்வி மற்றும் பள்ளிக்கு தேவையான உபகரணங்களை இலவசமாக வழங்கினார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அரிமா சங்கத்தினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ‘‘ஆளும் அதிமுக அரசு மக்களுக்கு தண்ணீர் வழங்க தவறியதால் காந்தி செய்த கிராம சேவையை போலவே காங்கிரஸ் கட்சியினரும் 72 மாவட்டங்களில் 72 குளங்கலை தூர் வார திட்டமிட்டுள்ளோம். மத்திய அரசின் அனைத்து தேர்வுகளும் ஹிந்தி குஜராத் ஆங்கிலத்தில் நடத்தபடுகிறது. இதனால் ஹிந்தி மற்றும் குஜராத் மொழியை தாய் மொழியாக கொண்டவர்களை தவிர மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆங்கிலத்தில் தேர்வெழுதுவதால் மதிப்பெண் குறைவாக பெருகின்றனர். மத்திய வேலை வாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும். கூட்டாட்சி முறையில் எங்களுக்கான உரிமையை வழங்க வேண்டும் என காங்கிரஸ் மோடி ஆட்சியை வலியுருத்துகிறது’’ என்றார்.