ஷிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ராணுவ வீரர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். இமாச்சலப் பிரதேச மாநில
தலைநகர் ஷிம்லாவில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் சோலன் என்ற இடம் உள்ளது. அங்கு, குமர்ஹட்டி - நாஹன் நெடுஞ்சாலை ஓரம் அமைந்துள்ள பல அடுக்குமாடி கட்டிடம் ஒன்று நேற்று பிற்பகல் 4 மணியளவில் கனமழை காரணமாக திடீரென இடிந்து விழுந்தது. இந்நிலையில், அடுக்குமாடி கட்டிடத்திற்கு உள்ளே ராணுவ வீரர்கள் 30 பேர் உள்பட 40க்கும் மேற்பட்டோர் இருந்ததால், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தலைமையில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.
ஜேசிபி எந்திரம் மூலம் கவனமான இடிபாடுகள் அகற்றப்பட்டு மீட்பு பணி நடைபெற்றது. தொடர்ச்சியாக, இதுவரை 13 பேர் ராணுவ வீரர்கள் உட்பட 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 17 ராணுவ வீரர்கள் உள்பட 28 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம்தாக்கூர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கட்டிடத்தின் அஸ்திவாரம் பலவீனமாக இருந்ததால் கனமழையால் விழுந்திருக்கலாம் என்று அவர் கூறினார். கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.