அன்சுருல்லா பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய புகாரில் டெல்லியில் 14 பேர் கைது: என்ஐஏ அதிகாரிகள் அதிரடி

டெல்லி: அன்சுருல்லா பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய புகாரில் டெல்லியில் 14 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய தீவிரவாதிகளை இலங்கை ராணுவத்தினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் குண்டுெவடிப்பில் கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த சிலருக்கு நேரடி தொடர்பு இருந்தது தெரியவந்தது.

பின்னர் இலங்கை அரசு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் குறித்து முழு விபரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியது. அதைதொடர்ந்து தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கேரளாவில் அதிரடி சோதனை நடத்தி பலரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தமிழகத்தில் நாகை, சென்னை மற்றும் மதுரையில் உள்ள சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது அந்நாட்டில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் தப்பி வந்த சிலர் சென்னையில்  பதுங்கி உள்ளதாக என்ஐஏ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து குறிப்பிட்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கி இருந்த  இலங்கையை சேர்ந்த சுரேந்திரன்(39), அரிகரன்(33), நிஷாத்தன்(35) ஆகிய 3 பேரை க்யூ பிரிவு போலீசார் கடந்த மே 12ம் தேதி கைது செய்து தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அதைதொடர்ந்து கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் இருந்து நேற்று முன்தினம் 10 பேர் கொண்ட குழுவினர் சென்னை வந்தனர். பிறகு 2 குழுக்களாக பிரிந்து மண்ணடி லிங்கி செட்டி தெருவில் உள்ள இஸ்லாமிய அமைப்பின் அலுவலகம் மற்றும் வேப்பேரியில் உள்ள இந்த அமைப்பின் அலுவலகம் மற்றும் புரசைவாக்கத்தில் உள்ள அந்த அமைப்பின் தலைவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலும் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, சென்னையை சேர்ந்த சையது புகாரி கேரளாவில் கைது செய்யப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததற்கான முக்கிய ஆவணங்களை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். அதேபோல், நாகை அருகே உள்ள சிக்கலை சேர்ந்தவர் அசன் அலி. இவரது உறவினர் நாகை மஞ்சக்கொல்லையை சேர்ந்த ஆரிஷ் முகமது ஆகியோரின் வீடுகளிலும் நேற்று முன்தினம் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, வீட்டில் அசன் அலி மட்டும் இருந்தார்.

ஆரிஷ் முகமது சென்னையில் இருந்தார். 2 பேரின் வீடுகளிலும் மதியம் 2.30 மணி வரை சோதனை நடந்தது. இந்த சோதனையில் தீவிரவாதத்திற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியது. அதன் தொடர்ச்சியாக சென்னையை சேர்ந்த சையது புகாரி, அசன் அலி, ஆரிஷ் முகமது ஆகிய மூவரிடம் விடிய விடிய தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. இந்த 3 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், “சென்னையை சேர்ந்த சையது புகாரி மற்றும் நாகையை சேர்ந்த அசன் அலி, ஆரிஷ் முகமது ஆகியோர் ‘அன்சுருல்லா’ என்ற புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கி இந்தியாவில் இஸ்லாமிய ஆதரவு ஆட்சியை ஏற்படுத்தவும், அதற்காக நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதலை நடத்த உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நிதி திரட்டியது உறுதிசெய்யப்பட்டது.

மேலும், நிதி திரட்டுவதற்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆட்களை சேர்ப்பதற்கான வேலைகளை இவர்கள் செய்து வந்துள்ளனர். மேலும், இவர்களுடன் பலர் இந்த அமைப்பில் சேர்ந்துள்ளனர். தற்போது அவர்கள் எங்கு உள்ளனர். அவர்கள் பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் அனைவரையும் கைது செய்வோம்”. என்று தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து, சையது புகாரி, அசன் அலி, ஆரிஷ் முகமது ஆகிய 3 பேர் மீது, கூட்டு சதி (120 பி), நாட்டுக்கு எதிராக சதி திட்டம் (121 ஏ), தேசத்துக்கு எதிராக போர் புரிய ஆட்களை திரட்டுதல் (122) மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் 17, 18, 18பி, 38, 39 சட்டப் பிரிவுகளின்படி தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு ெசய்தனர்.இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சையது புகாரியையும், இரண்டாவது குற்றவாளியாக அசன் அலி, மூன்றாவது குற்றவாளியாக ஆரிஷ் முகமது சேர்க்கப்பட்டுள்ளனர்.

முதல் குற்றவாளியான சையது புகாரி ‘ வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த்’ என்ற பெயரில் அமைப்பு ஒன்று நடத்தி வந்தார். இந்த அமைப்பை மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்த அமைப்பு தடை செய்யப்பட்டிருந்தாலும் ரகசியமாக இயங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சையது புகாரியை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், இவர்களின் கூட்டாளியான நாகையை சேர்ந்த தவ்ஹீத் முகமது வீட்டில் நேற்று அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. அதன்படி தவ்ஹீத் முகமதுவிடம் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதையடுத்து, மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள நாகை சிக்கலை சேர்ந்தவர் அசன் அலி, நாகை மஞ்சக்கொல்லையை சேர்ந்த ஆரிஷ் முகமதுவை நேற்று காலை சாலை மார்கமாக சென்னைக்கு அழைத்து வந்தனர்.

பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். ஆனால், நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் 2 பேரையும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியவில்லை. இதையடுத்து எழும்பூரில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பு வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி செந்தூர்பாண்டியன் வீட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது, தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வழக்கில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள 2 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர். ஆனால் நீதிபதி 2 பேரையும் வரும் 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அசன் அலி மற்றும் ஆரிஷ் முகமதுவை புழல் சிறையில் அடைத்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் பேரில் தற்போது 14 பேரை டெல்லியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அந்த 14 போரையும் இன்று மாலைக்குள் தனி விமானம் மூலமாக சென்னை கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் என்.ஐ.அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தற்போது தான் துபாய் சென்று டெல்லியில் தங்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் தலைமறைவாக ஒரே இடத்தில் பதுங்கியிருந்த போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இன்று மாலைக்குள் அவர்கள் சென்னை கொண்டுவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related Stories: