நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 65-ஆக உயர்வு: மீட்பு பணி தீவிரம்

காத்மாண்டு: நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65-ஆக உயர்ந்துள்ளது. நேபாளத்தில் கடந்த சில தினங்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர் மழை காரணமாக 25 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முக்கிய நதிகள் அனைத்திலும், வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. சாலைகள் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வீடுகளிலும் நீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். கனமழை காரணமாக பல இடங்கில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து, மின்சப்ளை பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்வதால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. 10,385 வீடுகள் மழையால் சேதம் அடைந்துள்ளன. 27,380 போலீசார் மீட்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 -ஆக உயர்ந்துள்ளது. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 38 பேர் காயம் அடைந்த நிலையில் காணாமல் போன 30 பேரை தேடி வருகின்றனர். நேபாளத்தில் 22 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதுவரை 1,146 பேர் மீட்கப்பட்டுள்ளார்.

லலித்பூர், கவ்ரே, கோடாங், போஜ்பூர் மற்றும் மகன்பூர் மாவட்டங்களில் தான் அதிகப்படியானோர் மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி இறந்துள்ளனர். அந்நாட்டின் வானிலை ஆய்வு மைய தகவல்படி, இன்னும் இரண்டு, மூன்று நாட்களுக்கு மழை அதிகமாகவே பெய்யும் என, தெரிவிக்கப்பட்டுள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிப்போர், அச்சமடைந்து உள்ளனர்.

Related Stories: