காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க காலையில் வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் வைபவம் ஜூலை 1ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 17ம் தேதி வரை 48 நாட்கள் நடைபெற உள்ள வைபவத்தில் அத்தி வரதர் முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும், அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இந்த வைபவம் தொடங்கிய முதல் நாளில் இருந்து உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வந்து 12 நாளில் 12 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர்.
இந்நிலையில் அத்திவரதரை இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். வரதராஜப்பெருமாள் கோயில் கிழக்கு வாசல் வழியாக இரவு 9 மணிவரை பக்தர்கள் அனுமதி; 10 மணிக்குள் தரிசனத்தை முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் தூய்மைப்பணி, அத்திவரதரை அலங்கரித்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக நேரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்திருந்தார்.
தினமும் காலை 11 மணி முதல் 12 மணி வரை சகஸ்நாமம் நடைபெற்று வந்த நிலையில் திடீரென காலை 6.30 - 7.30 மணிக்கு மாற்றப்பட்டது. சகஸ்நாமம் நடைபெறும் நேரத்தை திடீரென எந்த முன் அறிவிப்பும் இன்றி மாற்றியதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சகஸ்நாமம் நடைபெறும் ஒரு மணி நேரம் அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதியில்லை.