திருமயம்: அரிமளம் அருகே பா.ஜ பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக பக்கத்து வீட்டு வாலிபரை பிடித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள நம்பூரணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் நடராஜன் (37). இவர் பா.ஜ கட்சியில் வெளிநாடு வாழ் மாவட்ட துணை தலைவராக இருந்து விலகி, தற்போது பாஜ தொண்டராக உள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு நடராஜன் வழக்கம்போல் சாப்பிட்டு விட்டு வீட்டு வராண்டாவில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 12.20 மணிளவில் வீட்டு வாசலில் பலத்த சத்தம் கேட்டு தீ மளமளவென எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நடராஜன் கூச்சலிட்டதுடன் எரிந்த தீயை அணைக்க முயற்சி செய்தார். இவரின் சத்தம் கேட்ட மனைவி மற்றும் அருகில் குடியிருப்போர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.