மதுரை: முதல்வரின் நேர்முக உதவியாளர் எனக்கூறி மதுரை உயர் அதிகாரிகளை நம்ப வைத்து மதுரையில் விருந்தினர் மாளிகையில் தங்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கனியூர் திருவிக தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (36). இவர் நேற்றுமுன்தினம் மனைவி சரண்யா மற்றும் 2 குழந்தைகளுடன் மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். தனது செல்போனில் இருந்து மதுரை டிஆர்ஓ மற்றும் ஆர்டிஓவிற்கு ‘முதல்வரின் நேர்முக உதவியாளர் ராஜசேகர் பேசுகிறேன். மதுரையில் ஒரு திருமண விழாவிற்கு வந்துள்ளேன்’ எனக்கூறி அரசு விருந்தினர் மாளிகைளில் ஒரு அறை ஒதுக்கி தருமாறு கூறியுள்ளார். உடனே அதிகாரிகளின் உத்தரவின்பேரில் 13ம் தேதி இரவு 8.30 மணியளவில் ஊழியர்கள் அவருக்கு அறை ஒதுக்கிக் கொடுத்துள்ளனர். பின்னர் இவரது நடவடிக்கையைக் கவனித்த ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. விசாரித்தபோது, முதல்வரின் மகன் பெயரைச் கூறியுள்ளார்.