சேலம்: கர்நாடகா, ஆந்திராவில் நெல் விளைச்சல் குறைந்ததால், அரிசி மூட்டைக்கு ₹400 வரை அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால், நெல் விளைச்சல் எதிர்பார்த்த அளவில் இல்லை. அதே நேரத்தில் கர்நாடகா மற்றும் ஆந்திராவில் மழை சற்று கை கொடுத்ததால், நடப்பாண்டு தமிழகத்தை விட நெல் விளைச்சல் நன்கு உள்ளது. ஆனால், இந்த இரு மாநிலங்களிலும் இருந்து தமிழகத்திற்கு அரிசி வரத்து, வழக்கத்தை விட குறைந்து விட்டது. இது குறித்து சேலம் செவ்வாய்பேட்டை அரிசி மொத்த வியாபாரிகள் கூறியதாவது:இந்தியாவிலேயே தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் தான் நெல் சாகுபடி அதிகம். சேலம் செவ்வாய்பேட்டை, லீ பஜாருக்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் வாரத்தில் இருந்து, அரிசி வரத்து தொடங்கி ஏப்ரல் மாத இறுதி வரை இருக்கும். நடப்பாண்டு, வழக்கம்போல் மார்ச் முதல் வாரத்தில் அரிசி வரத்து தொடங்கியது. ஆனால், உள்ளூரில் இருந்து அரிசி வரத்து 30 சதவீதம் சரிந்தது. அதேபோல் கர்நாடகா, ஆந்திராவில் இருந்து வழக்கத்தை காட்டிலும், 20 சதவீதம் வரத்து குறைந்துள்ளது.