நாய்க்கு மயக்க பிஸ்கட் கொடுத்து இன்ஜினியர் வீட்டில் 80 சவரன் கொள்ளை : திருமுல்லைவாயலில் துணிகரம்

ஆவடி: திருமுல்லைவாயல், கமலம் நகர், 3வது பிரிவை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (55). பெங்களூருவில் உள்ள பொதுத்துறை நிறுவனமான பி.இ.எம்.எல்லில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமி.  இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தட்சிணாமூர்த்தி பெங்களூருவில் இருந்து வார விடுமுறையில் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். அதன்படி விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் மதியம் வீட்டை பூட்டி விட்டு தட்சிணாமூர்த்தி, தனது குடும்பத்தினருடன் பொருட்கள் வாங்க தி.நகருக்கு சென்றார். இரவு 9.30 மணி அளவில் வீட்டுக்கு திரும்பினார்.  அப்போது வீட்டின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, தட்சணாமூர்த்தி  குடும்பத்தினருடன் வீட்டுக்கு பின் பக்கம் சென்று பார்த்தார். அப்போது, அங்குள்ள கதவு உடைக்கப்பட்டு திறந்துகிடந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த 80 சவரன் தங்க நகைகள், 75 ஆயிரம் கொள்ளை போனது தெரிந்தது. மேலும், வீட்டில் இருந்த வெள்ளி பொருட்களையும் மர்ம நபர்கள் மூட்டை  கட்டி எடுத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தட்சிணாமூர்த்தி அளித்த புகாரின் பேரில், திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையர்களின் உருவங்களை வைத்து தீவிரமாக தேடுகின்றனர்.

விசாரணையில், வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கு கட்டி போட்டு இருந்த உயர் ரக நாய்க்கு மயக்க பிஸ்கட் போட்டு, அது மயங்கியவுடன் கொள்ளை செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, 3 தனிப்படை அமைத்து  கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மற்றொரு சம்பவம்:  மயிலாப்பூர் நொச்சி நகரை ேசர்ந்தவர் சொக்கலிங்கம் (60). தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 10 நாட்களுக்கு முன், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். நேற்று வீடு திரும்பியபோது, வீட்டு ஜன்னலை உடைத்து,  பீரோவில் வைத்திருந்த 10 சவரன் நகை மற்றும் ₹3 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில் ேபாலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: