பாரீஸ்: அமெரிக்காவுடன் மோதல் அதிகரித்துள்ள நிலையில், பாரீசில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பை பிரான்ஸ் நடத்தியுள்ளது.பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகரில் உள்ள பாஸ்டில் கோட்டை சிறைச்சாலை கடந்த 1789ம் ஆண்டு பிரெஞ்சு புரட்சியின் போது தகர்க்கப்பட்டு, ஜூலை 14ம் தேதி மன்னராட்சி தூக்கி எறியப்பட்டது. இது, பிரான்ஸ் நாட்டின் தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. நேற்று பிரான்ஸ் நாட்டின் 230வது தேசிய தினம் தலைநகர் பாரீசில் கொண்டாடப்பட்டது. அத்துடன் போருக்கு பிந்தைய பிரான்ஸ்-ஜெர்மனி நாடுகளின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் கடந்த 1989ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிராங்கோ-ஜெர்மன் பிரிகேட் படையின் 30ம் ஆண்டு நிறைவு விழாவும் கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி, பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு, கண்கவர் வாணவேடிக்கை நடைபெற்றது. விழாவில் பிரெஞ்சு, ஜெர்மனி ராணுவத்தினர் 5000 பேர் பங்கேற்ற அணிவகுப்பு நடந்தது. ஆயுதப் படையை சேர்ந்த 4,300 வீரர்கள், 196 வாகனங்கள், 237 குதிரைகள், 69 போர் விமானங்கள், 39 ஹெலிகாப்டர்கள் இந்த ராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்டன. இந்த அணிவகுப்பை ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மார்கெல், நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
வரி விதிப்பு உட்பட பல்வேறு விவகாரங்களால் அமெரிக்காவுடன் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு மோதல் அதிகமாகி இருக்கிறது. இதுபோன்ற நிலையில், ஐரோப்பிய யூனியனின் ராணுவ பலத்தை பறைசாற்றும் வகையில் மேக்ரன் இந்த அணிவகுப்பை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.