இஸ்லாமாபாத்: ஆய்வுப்பணிகளை முடித்தபின் தங்கம் மற்றும் தாமிர சுரங்கத்தை, வெளிநாட்டு நிறுவனத்துக்கு குத்தகைக்கு விட பாகிஸ்தான் மறுத்ததால் அந்நாட்டுக்கு, சர்வதேச தீர்ப்பாயம் 40 ஆயிரம் கோடி அபராதம் விதித்துள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் சாகை மாவட்டத்தில் ‘ரெகோ டிக்’ என்ற நகரம் உள்ளது. ரெகோ டிக் என்றால் பலூச்சி மொழியில் மணல் குன்றுகள் என அர்த்தம். இது ஈரான் மற்றும் ஆப்கன் எல்லையை ஒட்டியுள்ளது. இங்கு தங்கம் மற்றும் தாமிரம் தாதுக்கள் அதிகளவில் உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டது. ரெகோ டிக் பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டு சுரங்கம் அமைக்கும் முயற்சியில் ‘தி டெத்யான் காப்பர் கம்பெனி(டிசிசி) இறங்கியது. இது சிலி நாட்டைச் சேர்ந்த சுரங்க நிறுவனம் ‘ஆன்டோபகஸ்டா’ மற்றும் கனடாவின் பேரிக் கோல்ட் கார்பரேஷன் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் செயல்படும் நிறுவனம். பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்தபின், இங்கு சுரங்கம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளை டிசிசி நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடித்தது. அதன்பின் ரெகோ டிக் பகுதியில் சுரங்கத்தை குத்தகைக்கு எடுக்க பாகிஸ்தானின் பலுசிஸ்தான் நிர்வாகத்திடம் டிசிசி விண்ணப்பித்தது. இதை பலுசிஸ்தான் நிராகரித்துவிட்டது. இதனால் இத்திட்டம் கடந்த 2011ம் ஆண்டு நின்றது. இதை எதிர்த்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் டிசிசி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கடந்த 2013ம் ஆண்டு தீர்ப்பளித்த அப்போதைய தலைமை நீதிபதி இப்திகார் முகமது சவுத்ரி, ‘ரெகோ டிக் ஒப்பந்தம், பாகிஸ்தானின் சட்டங்களுக்கு முரணாக உள்ளதால், அது செல்லாது’’ என தீர்ப்பளித்தார்.