மசூதி தாக்குதல் சம்பவத்துக்குப் பின் துப்பாக்கிகளை ஒப்படைக்கும் நியூசிலாந்து மக்கள்

வெலிங்டன்: நியூசிலாந்து அரசின் வேண்டுகோளை ஏற்று, தாங்கள் வைத்திருக்கும் தானியங்கி துப்பாக்கிகளை அதன் உரிமையாளர்கள் ஒப்படைத்து அதற்குரிய பணத்தை பெற்று வருகின்றனர். நியூசிலாந்தில் உள்ள கிரைஸ்ட் சர்ச் பகுதியில் உள்ள 2 மசூதிகளில், ஆஸ்திரேலிய வாலிபரான பிரண்டன் டரன்ட் என்பவர் கடந்த மார்ச் மாதம் தானியங்கி துப்பாக்கியுடன் நுழைந்து தாக்குதல் நடத்தினார். இதில், 51 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, நியூசிலாந்தில் தானியங்கி துப்பாக்கிகளை மக்கள் வைத்திருக்க தடை விதிக்கப்பட்டது. தாங்கள் வைத்திருக்கும் தானியங்கி துப்பாக்கிகளை இந்தாண்டு இறுதிக்குள் ஒப்படைப்பவர்களுக்கு பொது மன்னிப்பும், இழப்பீடும் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இழப்பீடு வழங்குவதற்காக ரூ.917 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.நியூசிலாந்தில் மொத்தம் 10 முதல் 15 லட்சம் தானியங்கி துப்பாக்கிகள் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் 2 லட்சத்து 50 ஆயிரம் துப்பாக்கிகளுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் ஒப்படைக்கும் துப்பாக்கிகளுக்கு அதன் நிலையை பொருத்து, அதன் விலையில் 25 சதவீதம் முதல் 95 சதவீதம் வரை இழப்பீடு வழங்கப்படுகிறது.

துப்பாக்கிகளை ஒப்படைக்கும் முதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், 169 பேர் துப்பாக்கிளை ஒப்படைத்து ரூ.1 கோடியே 97 லட்சம் பணம் பெற்றனர். இந்த பணம் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. சிலர் தாங்கள் வைத்திருந்த தடை விதிக்கப்படாத சாதாரண துப்பாக்கிகளையும் ஒப்படைத்தனர். ஆனால், அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. இது போல், 250 நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கிகளை இயந்திரங்கள் மூலமாக போலீசார் நொறுக்கினர். இத்திட்டத்துக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Related Stories: