கடந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வந்த இரண்டாம் தலைமுறை மாருதி எர்டிகா கார் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. கவரும் டிசைன், அதிக இடவசதி, புதிய இன்ஜின் தேர்வுகள், சரியான விலை போன்றவை இந்த காருக்கு அதிக வரவேற்பை பெற்று தந்துள்ளது. இந்நிலையில், மாருதி எர்டிகா காரின் சொகுசு மாடலும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. மாருதி எர்டிகா கிராஸ் என்ற பெயரில் இந்த மாடல் அடுத்த மாதம் விற்பனைக்கு வர உள்ளது. மாருதியின் நெக்ஸா பிரிமீயம் ஷோரூம்கள் வாயிலாக இப்புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.இப்புதிய கார், வெளிப்புறத்தில் ஏராளமான கூடுதல் ஆக்சஸெரீகளுடன் வசீகரமான அம்சங்களுடன் வருகிறது. முக்கிய விஷயமாக, நடுவரிசையில் பெஞ்ச் வகை இருக்கைக்கு பதிலாக இரண்டு கேப்டன் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், அடிக்கடி நீண்ட தூரம் பயணிக்கும் வர்த்தகர்கள், தொழிலதிபர்களுக்கு சிறந்த தேர்வாக மாறும்.