புதுடெல்லி: நாட்டில் விவசாயிகளின் நிலை மோசமாக இருப்பதாக மக்களவையில் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘‘கேரளாவில் வயநாடு உட்பட மாநிலம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். நாடு முழுவதிலும் விவசாயிகளின் நிலை மோசமாகவே இருக்கிறது. விவசாயிகளுக்கு கடன் கொடுத்த வங்கிகள், கடனை திருப்பி செலுத்தாததால் பறிமுதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளன. இதனால், விவசாயிகள் உடனடியாக தங்கள் சொத்துக்களை விட்டு வெளியேறும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர். இதன் காரணமாக கேரளாவில் 18 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதில் பிரதமர் தலையிட்டு, விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும், தொழிலதிபர்களுக்கு 4.3 லட்சம் கோடி கடன் தள்ளுபடியும், வங்கி கடன் பெற்றவர்களுக்கு 5.5 லட்சம் கோடியும் அரசு சலுகை அளிக்கிறது. ஆனால், விவசாயிகளுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. தொழிலதிபர்களை காட்டிலும் விவசாயிகளை தாழ்ந்தவர்கள் என அரசு ஏன் நினைக்கிறது?” என்றார்.