செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அம்சம் கொண்ட இந்தியாவின் முதல் மின்சார பைக் மாடலாக ரிவோல்ட் ஆர்வி400 அண்மையில் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. வரும் ஜூலை 22-ந்தேதி இப்புதிய மின்சார பைக் மாடல் விற்பனைக்கு வர உள்ளது. டெல்லி உள்ளடக்கிய என்சிஆர் பிராந்தியத்தில் முதல்கட்டமாக விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து, அடுத்த 4 மாதங்களுக்குள் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்களிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். இந்த பைக்கில் முழுமையான எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், புளூடூத் இணைப்பு வசதிகள் உள்ளன. இதன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரை ஸ்மார்ட்போன் மூலமாக இணைத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது. இதனை வைத்து வண்டியின் இயக்கம் குறித்த பல்வேறு தகவல்களையும், வசதிகளையும் பெற முடியும். இந்த பைக்கின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், 156 கி.மீ தூரம் வரை பயணிக்க முடியும்.