அவனியாபுரம்: திமுக - காங்கிரஸ் கூட்டணி, உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதுரை விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி:காவிரி மேலாண்மை வாரியத்தின் விதிமுறைகளை கர்நாடக அரசு மதிக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தை டெல்லியில் நடத்தாமல் கர்நாடகத்தில் நடத்த வேண்டும். தற்போது கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரை முறையாக தமிழகத்துக்கு வழங்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட வேண்டும்.
இதனை கர்நாடக அரசு மறுப்பது அரசியல் சட்டத்தை மீறுகின்ற செயலாகும். வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுக கொண்டு வருகின்ற தீர்மானங்களை நிச்சயமாக காங்கிரஸ் ஆதரிக்கும். திமுக - காங்கிரஸ் கூட்டணி வருகின்ற உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும். இது மதச்சார்பற்ற கூட்டணி. கொள்கை அடிப்படையிலான கூட்டணி. பூமியிலிருந்து நிலவுக்கு செல்வதற்கு கூட 3 வாரங்கள் ஆகாது. லார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் வருவதற்கு மூன்று வாரங்கள் ஆகும் என்பது கேலிக்குரியதாக உள்ளது.பஞ்சம் என்பது உலகறிந்த உண்மை. இதுகுறித்து இந்திய வானிலை நிலையம் முன்னெச்சரிக்கை செய்துள்ளது. அதனை உணர்ந்து தமிழக அரசு திட்டமிட்டிருக்க வேண்டும். இது தமிழக அரசின் தோல்வி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.