கோவை: பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது குழந்தை அழுததால் கிணற்றில் வீசி கொன்றதாக கைதான உறவினர் வாக்குமூலம் அளித்துள்ளார். கோவை அன்னூர் அருகே அக்கரைசெங்கப்பள்ளியை சேர்ந்தவர் கனகராஜ் (28). பொக்லைன் இயந்திர டிரைவர். இவரது மனைவி காஞ்சனா (23). இவர்களுக்கு இரண்டரை வயதில் அரும்பதா என்ற குழந்தை இருந்தது. இவர்கள் பீளமேடு விளாங்குறிச்சி ரோட்டில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன் கனகராஜ் தனது பெற்றோரை பார்க்க ெதாட்டிபாளையம் சென்றுவிட்டார். அன்று இரவு காஞ்சனா குழந்தையுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அதிகாலை 3.30 மணிக்கு குழந்தையை திடீரென காணவில்லை. அடுத்தநாள் காலை வீட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் இருந்த பாழடைந்த கிணற்றில் குழந்தை அரும்பதாவின் சடலம் கிடந்தது. இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிந்து, குழந்தையின் தாய். காஞ்சனா, அவர்கள் வீட்டில் தங்கி இருந்த அவரது தாய் பேச்சியம்மாள், தந்தை குப்புசாமி (60), காஞ்சனாவின் தங்கை மகன் பூபதி (26), குப்புசாமியின் முதல் மனைவியின் மகள் கற்பக விஷ்ணு (28), மகன் ரகுநாதன் (26) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் வீடு, கிணற்றுமேடு ஆகிய இடங்களில் சோதனை செய்தனர். அப்போது கிணற்றுமேட்டில் காலி மது பாட்டில் கிடந்ததை கண்டுபிடித்தனர். சம்பவத்தன்று இரவு குழந்தையின் தாய் காஞ்சனா, குப்புசாமி முதல் மனைவி மகன் ரகுநாதன், மகள் கற்பக விஷ்ணு, பேச்சியம்மாள் தங்கை மகன் பூபதி ஆகிய 4 பேர் வீட்டிற்குள் படுத்து தூங்கியுள்ளனர். இவர்களில் ஒருவர் தான் கொலையாளியாக இருக்க முடியும் என போலீசார் சந்தேகித்து 4 பேரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது ரகுநாதனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருப்பது தெரியவந்தது. தீவிர விசாரணையில், குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்ததை ரகுநாதன் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.