ஈரோடு: ஈரோட்டில் நடந்த இலவச லேப்டாப் வழங்கும் விழாவில் பத்திரிகை நிருபர்களை தாக்கியதாக அதிமுக எம்எல்ஏ மகன் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோட்டில் பல்வேறு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த 24ம் தேதி இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், அதிமுக எம்எல்ஏக்கள் ராமலிங்கம், தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு நடப்பு கல்வியாண்டில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கினர். அப்போது, கடந்த ஆண்டு மாணவ-மாணவிகள் தங்களுக்கும் லேப்டாப் வழங்க வலியுறுத்தி எம்எல்ஏக்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், எம்எல்ஏக்கள் மாணவர்களின் கோரிக்கையை ஏற்காமல் சென்றதால், அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதேபோல், ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், முன்னாள் மாணவ-மாணவிகள் லேப்டாப் வழங்காததை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டனர். இதையடுத்து, எம்எல்ஏக்கள் மாணவ-மாணவிகளின் பிரதிநிதிகளை அழைத்து தனி வகுப்பறையில் பேச்சு நடத்தினர்.