×

வேறு சமூக பெண்ணை காதலித்ததால் கொன்றேன்: தம்பியை கொலை செய்த அண்ணன் வாக்குமூலம்

கோவை: ‘காதலை கைவிடும்படி பலமுறை எச்சரித்தும் வேறு சமூக பெண்ணை காதலித்ததால் தம்பியை கொன்றேன்’ என்று கைதான அண்ணன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வெள்ளிபாளையம் சாலையில் உள்ள ரங்கராயன் ஓடை பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மகன்கள் வினோத் மற்றும் கனகராஜ்(22). வினோத் லேத் பட்டறை ெதாழிலாளி. கனகராஜ் உருளை கிழங்கு மண்டியில் வேலை செய்து வந்தார். அவர் அதே பகுதியை சேர்ந்த வர்ஷினி பிரியா, என்ற பெண்ணை இரண்டு ஆண்டுகளாக காதலித்துள்ளார். மூன்று மாதங்களுக்கு முன் கனகராஜ், வர்ஷினி பிரியாவை தனது தந்தையிடம் அழைத்து சென்றுள்ளார். கனகராஜின் தந்தை அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்துள்ளார். ஆனால், திருமணம் செய்து வைக்கவில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கனகராஜ், வர்ஷனி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை தம்பி வீட்டுக்கு சென்ற வினோத், வர்ஷினி பிரியாவை திருமணம் செய்ய கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கனகராஜை சரமாரியாக  வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதை தடுக்க வந்த வர்ஷினி பிரியாவுக்கும் வெட்டு விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இது தொடர்பாக மேட்டுப்பாளையம் ேபாலீசார் வழக்குப்பதிந்து வினோத்தை  கைது செய்தனர்.
 வினோத் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: எனது தம்பி கனகராஜ். வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததால் பலமுறை கண்டித்தேன். இருப்பினும் அவன் கண்டு கொள்ளாமல் அந்த பெண்ணை திருமணம் செய்வதிலேயே உறுதியாக இருந்தான். கடந்த சில நாட்களாக கனகராஜ் அந்த பெண்ணுடன் தனியாக வசித்து வந்தான். இது எனது ஆத்திரத்தை மேலும் அதிகப்படுத்தியது. இதனால் இருவரையும் கொலை செய்ய நினைத்தேன். சம்பவத்தன்று அவர்களுடைய வீட்டுக்கு சென்ற நான் தம்பி கனகராஜை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தேன் என கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் வர்ஷினி பிரியாவின் தாய் அமுதா நேற்று பல்வேறு அமைப்பினருடன் கோவை கலெக்டர் ராசாமணியை சந்தித்து அளித்த மனுவில், நாங்கள் தாழ்த்தப்பட்ட  சமூகத்தை சேர்ந்தவர்கள். எனது மகள் உயிர் பிழைப்பது கடினம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கொலைக்கு பின்னணியில் உள்ள அனைவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

Tags : I killed , loving another,social woman,brother confessed , killing brother
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...