திருவொற்றியூர்: திருவொற்றியூர் பகுதிகளில் தனியார் சிலர் பன்றிகள் வளர்த்து வருகின்றனர். இவர்கள் இந்த பன்றிகளை வீட்டில் வைத்து வளர்க்காமல் வெளியே திரிய விடுகின்றனர். இதனால் பன்றிகள் தெருவில் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் உள்ள கழிவுகளை சாப்பிட வரும்போது இருசக்கர வாகனங்களில் மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு தெருவில் நடந்து சென்ற திருவொற்றியூர் விம்கோ நகரை சேர்ந்த பிரியா, ரஞ்சித் உள்பட 5 பேரை அப்பகுதியில் சுற்றித்திரிந்த பன்றி கடித்து காயப்படுத்தியது. இந்நிலையில் நேற்று காலை திருவொற்றியூர் சுகாதாரத்துறை அதிகாரி இளஞ்செழியன் தலைமையில் அதிகாரிகள் ராஜாஜி நகர் அருகே உள்ள மாநகராட்சி குப்பை கிடங்குக்கு வந்தனர். பின்னர் அங்கு சுற்றிய 19 பன்றிகளை பிடித்து வாகனத்தில் ஏற்றி சென்றனர்.