114வது பிறந்த நாளை முன்னிட்டு ம.பொ.சி உருவ படத்துக்கு அமைச்சர்கள் மரியாதை

சென்னை: ம.பொ.சியின் 114வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய திருவுருவ சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள படத்திற்கு நேற்று அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.தமிழக அரசால் தமிழ் சான்றோர்கள், விடுதலை போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில் பிறந்த நாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி  விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ம.பொ.சி பிறந்த தினமான ஜூன் 26ம் நாள் இந்த ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி, ம.பொ.சிவஞானம் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் தியாகராய நகரில் அமைந்துள்ள திருவுருவ சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு நேற்று மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக  சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பென்ஜமின், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன், தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் சத்தியா, தமிழ்நாடு பாடநூல்  மற்றும் கல்வியியல் கழக தலைவர் வளர்மதி கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் சங்கர், கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு)  ரவீந்திரன், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: