சுவர் விளம்பரத்தை அழித்ததை கேட்டதால் வி.சிறுத்தை பிரமுகர் மகன் மீது தாக்குதல்: அதிமுகவினரிடம் விசாரணை

ஆலந்தூர்: ஆலந்தூர், வடக்கு ராஜா தெருவை சேர்ந்தவர் சேகர் (55). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமூக நல பிரிவு மாவட்ட அமைப்பாளர். இவர், தனது கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு ஆலந்தூர் ஆசர்கானா  பகுதியில் சுவர் விளம்பரம் எழுதி இருந்தார்.இந்நிலையில் இந்த விளம்பரத்தினை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ராமதாசின் ஆதரவாளர்கள் அழித்ததாக கூறப்படுகிறது. அப்போது குடும்பத்தினரோடு அந்த வழியாக காரில் வந்த சேகர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, ‘‘ஏன் தலைவர்  விளம்பரத்தை அழிக்கிறீர்கள்” என்று தட்டிக்கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், ‘‘நாங்க பிடிச்சு வச்ச இடத்தில நீ எழுதினா விட்டுடுவோமா. இப்படிதான் அழிப்போம்” என கூறியுள்ளனர்.

இதனால் இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அதிமுகவினர் சேகரை தாக்க பாய்ந்து வந்தனர். இதனை தடுக்க முயன்ற சேகரின் மகன் ராஜ்குமார் (20) என்பவரை அதிமுகவினர் சரமாரியாக தாக்கினர். இதில்  அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதுகுறித்து பரங்கிமலை காவல் நிலையத்தில் ராஜ்குமாரின் மனைவி காவேரி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அதிமுகவினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: