காதல் விவகாரத்தில் பயங்கரம் கல்லூரி மாணவன் குத்திக்கொலை: சக மாணவன் கைது

சென்னை: காதல் விவகாரத்தில் கல்லூரியிலேயே கல்லூரி மாணவன் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சக மாணவரை போலீசார் கைது செய்தனர். சென்னை துரைப்பாக்கம் ராஜீவ் காந்தி சாலையில் தனியார் சமையல் பயிற்சி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் தமிழகம் உட்பட பல்ேவறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பயில்கின்றனர். ஆந்திரா மாநிலம், அனந்தபூர் மாவட்டம்,  காமண்டூர் மண்டல் பாலூர் கிராமத்தை சேர்ந்த செவன்குமார் (20) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஹரிஹர சண்முகம் (20) ஆகிய இருவரும் முதலாமாண்டு பிஎஸ்சி கேட்டரிங் பயின்று வந்தனர்.  இந்நிலையில் செவன்குமார், சென்னையில் பணிபுரியும் ஹரிஹர சண்முகத்தின் சித்தப்பா மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் ஹரிஹர சண்முகத்திற்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஹரிஹர சண்முகம்,  செவன்குமாரை பலமுறை கண்டித்தார். ஆனாலும் செவன்குமார் தொடர்ந்து அந்த பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து, தனது தங்கையிடம், ‘‘செவன்குமார் மிகவும் ேமாசமானவன். அவனை நீ நம்பாதே’’ என்று  கூறியுள்ளார். இந்த தகவலை அவரது தங்கை செவன்குமாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து நேற்று கல்லூரிக்கு வந்த ஹரிஹர சண்முகத்திடம், செவன்குமார்  இதுபற்றி ேகட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஹரிஹர சண்முகம் மறைத்து வைத்திருந்த சமையல்  செய்ய பயன்படுத்தும் கத்தியால் செவன்குமாரை சரமாரியாக குத்தினார். இதில், சம்பவ இடத்திலேயே செவன்குமார் துடித்துடித்து உயிரிழந்தார். இதை பார்த்து அங்கிருந்த சக மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துரைப்பாக்கம் உதவி கமிஷனர் லோகநாதன், இன்ஸ்பெக்டர் ஜோஸ் மற்றும் போலீசார் இறந்த மாணவரின் உடலை கைப்பற்றி  ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி  வைத்தனர். மேலும் ஹரிஹர சண்முகத்தை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: