ஓட்டை அவருக்குத்தானே போட்டீங்க... மோடிக்கிட்டேயே போய் வேலை ேகளுங்கள்: முதல்வர் குமாரசாமி ஆவேசம்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டத்தில் நேற்று கிராம தரிசனம் நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் குமாரசாமி பஸ்சில் பயணம் செய்தார். அப்போது ஒய்டிபிஎஸ் மற்றும்  துங்கபத்ரா அணையில் தற்காலிக தொழிலாளர்களாக பணியாற்றி வருவோர் தங்களின்  கோரிக்கையை முதல்வரிடம் தெரிவிப்பதற்காக வந்தனர். அவர்களை போலீசார் நெருங்கவிடாமல் தடுத்தனர். இதனால் தொழிலாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையில்  கடும் வாக்குவாதம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  முதல்வரை முற்றுகையிடும் வகையில் வந்ததால், அவர்களை போலீசார் பேரிகேட்  போட்டு தடுத்து நிறுத்தினர். அதை தள்ளிக்கொண்டு செல்ல தொழிலாளர்கள்  முயற்சித்தபோது, போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

இதனால் அப்பகுதியில் சில  நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வருக்கு எதிராக சில தொழிலாளர்கள்  முழக்கம் எழுப்பினர். போலீசாருக்கும் தொழிலாளர்களுக்கு இடையில் சுமார் 20  நிமிடங்களுக்கு மேல் வாக்குவாதம் நடந்தது. இதை பார்த்து கொண்டிருந்த  முதல்வர் குமாரசாமி கோபத்தின் உச்சிக்கு சென்றார். போராட்டத்தில்  ஈடுபட்ட தொழிலாளர்களை பார்த்து, ‘‘தேர்தலில் மோடிக்கு வாக்களிக்கிறீர்கள்,  வேலையை மட்டும் என்னிடம் கேட்கிறீர்கள். இது என்ன நியாயம்? குறிப்பிட்ட  நேரத்திற்குள் நான் கரேகுட்டே கிராமத்திற்கு செல்ல வேண்டும். பஸ்சுக்கு வழி  விடுவீர்களா? இல்லை லத்தி சார்ஜ் செய்ய வேண்டுமா?’’ என்று கோபமாக கேட்டார்.  முதல்வரின் இந்த கோபமான பேச்சு தொழிலாளர்களுக்கு ஆத்திரத்தையும்,  அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. அவர்களை கண்டுக்கொள்ளாத முதல்வர் குமாரசாமி 30  நிமிட பரபரப்புக்கு பின் கரேகுட்டே கிராமத்திற்கு புறப்பட்டு  சென்றார்.

Related Stories: