காஷ்மீர் பாதுகாப்பு அமித் ஷா ஆய்வு

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று ஆய்வு மேற்கொண்டார்.  மத்திய உள்துறை அமைச்சராக, பாஜ தலைவர் அமித் ஷா கடந்த மாதம் பொறுப்பேற்றார். உள்துறை அமைச்சரான பின்னர் முதல் அரசு முறை பயணமாக அவர் ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள அவரை மாநில ஆளுநர் சத்யபால் மாலிக், அவரது ஆலோசகர்கள் மற்றும் உயரதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர். கடந்த காலங்களில் பிரதமர் வந்தால் மட்டுமே ஆளுநர் நேரில் சென்று வரவேற்பது மரபாகும்.  ஜம்மு காஷ்மீர் வந்ததும் உயரதிகாரிகள், பல்வேறு பாதுகாப்பு ஏஜென்சிகளை சேர்ந்த தலைவர்கள் உள்ளிட்டோருடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.

உள்துறை விவகாரங்கள் துறை பொறுப்பு ஆலோசகர் விஜய் குமார், உள்துறை செயலர் ராஜீவ் காபா மற்றும் மாநில உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். அமர்நாத் யாத்திரை செல்பவர்களின் பாதுகாப்பு, அதற்காக எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்தும் அமித் ஷா கேட்டறிந்தார். இன்று அவர் தெற்கு காஷ்மீரில் உள்ள அமர்நாத் கோயிலுக்கு செல்லவும்,  மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த போலீசாரின் குடும்பங்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.

Related Stories: