சென்னை: தூத்துக்குடி தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழி நேற்று நாடாளுமன்றத்தில் பேசியதாவது: தூத்துக்குடியில் போராடிய அப்பாவி பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அந்த இடத்திலேயே 13 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 16 பேர் கொல்லப்பட்ட இந்த விவகாரத்தின் மீதான வழக்கில், மதுரை உயர் நீதிமன்றக் கிளை, ‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்’ என்று 2018 ஆகஸ்ட் 14ம் தேதி உத்தரவிட்டது. மேலும் விசாரணையை நான்கு மாதங்களுக்குள் முடிக்குமாறும் உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது. துப்பாக்கிச் சூடு நடந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு 10 மாதங்கள் ஆகியும் சிபிஐ ஒரே ஒரு போலீஸ் அதிகாரியின் பெயரைக் கூட எப்ஐஆரில் சேர்க்கவில்லை. சிபிஐ விசாரணையின் நிலை இப்படி இருந்தால், தூத்துக்குடி மக்களுக்கு எவ்வாறு நீதி கிடைப்பது உறுதிப்படுத்தப்படும்? தேசிய மனித உரிமை ஆணையம் இதுதொடர்பாக தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக மாநில அரசு அமைத்த ஆணையத்தின் அறிக்கையை காரணமாக சொல்லி, மனித உரிமை ஆணையம் தனது ஆய்வை முடித்துக் கொண்டதோடு அறிக்கையையும் பொதுவெளியில் வைக்கவில்லை.