காஞ்சிபுரம் கோயிலில் நகைகள் மோசடி வழக்கில் 87 வயது குருக்களுக்கு ஜாமீன்

கும்பகோணம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 1,600 ஆண்டு பழமையான சோமஸ்கந்தர் மற்றும் ஏலவார்குழலி தெய்வ சிலைகள் சேதமடைந்தாக கூறி புதிய ஐம்பொன் சிலைகள் செய்ய ₹2.82 கோடி மதிப்பிலான 8.7 கிலோ தங்கம் நன்கொடையாக பக்தர்களிடமிருந்து பெறப்பட்டது. ஆனால் புதிய சிலைகள் செய்வதில் அந்த தங்கத்தை சேர்க்காமல் மோசடி செய்ததாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

இதில் அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி, கூடுதல் ஆணையர் கவிதா, ஸ்தபதி முத்தையா ஆகியோர் ைகது செய்யப்பட்டு ஜாமீனில் வந்தனர்.  இவ்வழக்கில் தொடர்புடைய முன்னாள் குருக்கள் ராஜப்பா (87) விசாரணை காலத்தில் கனடா தப்பி சென்றார். இந்நிலையில் கனடாவில் இருந்து கடந்த 22ம் தேதி மும்பை விமான நிலையம் வந்த குருக்கள் ராஜப்பாவை விமான நிலைய போலீசார் கைது செய்தனர். அவரை ஜூலை 5 வரை காவலில் வைக்க கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், வயது முதிர்வால் அவதிப்படுவதால் அவருக்கு கும்பகோணம் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.

Related Stories: