சென்னை: அதிமுகவில் சேர்ந்தாலும் ஓபிஎஸ், அவரது மகன் ரவீந்திரநாத் குமாரை தாண்டி அரசியலில் பிரகாசிக்க முடியுமா என்ற குழப்பம் தங்க.தமிழ்செல்வனுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அதிமுகவில் சேர தயக்கம் காட்டுவதாகவும், பாஜவில் சேருவதற்காக தூது விடுகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.அதிமுக பிளவுபட்டு டி.டி.வி.தினகரன் தனி அணியாக செயல்பட தொடங்கியதும், அவருக்கு பக்கபலமாக இருந்தவர் தங்கதமிழ்செல்வன். அமமுக கொள்கை பரப்பு செயலாளராகவும், தேனி மாவட்ட செயலாளராகவும் வலம் வந்த தங்கதமிழ்செல்வன், அந்த அணி சார்பில் பத்திரிகையாளர்களை சந்திப்பதும், டிவி விவாதங்களில் பங்கேற்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார். இதற்கிடையில் தங்க.தமிழ்செல்வன், தினகரனை திட்டும் ஆடியோ பேச்சு சமூக வலைத்தளங்களிலும், ‘டிவி’ மற்றும் பத்திரிக்கைகளிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்கிடையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு தேனியில் கூட்டம் நடத்த அமமுக நிர்வாகிகளை அழைத்த தங்கதமிழ்செல்வன், அவர்களில் பெரும்பாலானோர் சென்னைக்கு சென்று விட்டதை அறிந்து கொந்தளித்தார். அந்த கோபத்தை வெளிப்படுத்திய அவர், தேனியில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓட்டலில் இருந்து கேரளாவிற்கு சென்று ஒரு ரகசிய இடத்தில் தங்கி விட்டதாக கூறப்படுகிறது.