ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த மே மாதம் நடைபெற்ற மலர்கண்காட்சியில் 30 ஆயிரம் தொட்டிகள் மாடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்து. 5 ஆயிரம் தொட்டிகளை கொண்டு மலர் கூடை அலங்காரம், செல்பி ஸ்பாட் ஆகியவை செய்யப்பட்டிருந்தது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். கடந்த மாதம் 31ம் தேதியுடன் சீசன் முடிந்த நிலையிலும், காலநிலையில் மாற்றம் ஏற்படாத நிலையில், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறையாமல் இருந்தது. இதனால், மலர் அலங்காரங்கள் அகற்றப்படாமல் இருந்தது.
ஆனால், நாளுக்கு நாள் தொட்டிகளில் வைக்கப்பட்டிருந்த மலர்கள் காய்ந்து போக துவங்கியதாலும், விதைகள் சேகரிக்கும் பணிகள் துவங்கியதாலும் தொட்டிகள் குறைந்துக் கொண்டே வந்தது. கடந்த மாதம் 30 ஆயிரம் இருந்த இடத்தில் கடந்த வாரம் வெறும் 1000ம் தொட்டிகள் மட்டுமே இருந்தன. அதிலும், பல தொட்டிகளில் இருந்த மலர்கள் காய்ந்து போய் காணப்பட்டன. இதனால், நேற்று தாவரவியல் பூங்கா மாடத்தில் இருந்த மலர் தொட்டிகள் முழுமையாக அகற்றப்பட்டன. விதைகள் சேகரிப்பிற்காக தொட்டிகள் அனைத்தும் இடம் மாற்றப்பட்டன. மாடங்களில் இருந்த தொட்டிகள் அகற்றப்பட்ட நிலையில், நேற்று முதல் பெரணி இல்லம் புல் மைதானம் உட்பட மாடங்களுக்கு செல்லவும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பூங்கா அதிகாரிகள் கூறுகையில், ‘’ 2ம் சீசனின் போதே இனி மாடங்களில் மலர் தொட்டிகள் வைக்கப்படும். அதன்பின்னரே சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்’’ என்றனர்.