கொள்கையே இல்லாத கட்சிக்கு கொள்கை பரப்பு செயலாளராக இருந்து பயன் என்ன: தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி

மதுரை: கொள்கையே இல்லாத கட்சிக்கு கொள்கை பரப்பு செயலாளராக இருந்து பயன் என்ன என தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுகவுக்கு எதிராக அமமுக என்ற தனிகட்சியை துவக்கிய டிடிவி தினகரன் சந்தித்த முதல் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில்லேயே படுதோல்வியை சந்தித்தார். சட்டசபை இடைத்தேர்லில் ஒன்றில் கூட ஜெயிக்கவில்லை. குறிப்பாக ஓபிஎஸ் மகன் போட்டியிட்ட தேனி நாடாளுமன்ற தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட தங்கதமிழ்ச்செல்வன் படுதோல்வி அடைந்தார்.தேர்தலுக்கு முன்பும் பின்பும் பலர் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிக்கு சென்றுவிட்டனர். இந்த சூழ்நிலையில், டி.டி.வி.தினகரனை தங்கதமிழ்ச்செல்வன் கடுமையாக எச்சரிக்கை விடும் வகையில் பேசிய ஆடியோ நேற்று முன்தினம் சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிடிவி தினகரன் ஆலோசனை;

இந்தநிலையில் தேனி மாவட்ட அமமுக முக்கிய நிர்வாகிகள் நேற்று சென்னை அடையாரில் உள்ள டி.டி.வி.தினகரன் இல்லத்துக்கு வந்து ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டம் முடிந்ததும், தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:  அமமுக புதிய நிர்வாகிகள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள். முதல் முதலாக கட்சியில் யாரையும் நீக்க வேண்டாம் என்பதால்தான் தங்கதமிழ்ச்செல்வன் நீக்கம் தள்ளி போகிறது. யாரையும் கட்சியை விட்டு நீக்குவதற்கு எந்தவித அச்சமோ, பயமோ, தயக்கமோ எனக்கு இல்லை. ஜூலை முதல் வாரம் தலைமை கழக நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படும். அதற்குள், பெங்களூரு சென்று சசிகலாவிடம் ஆலோசனை நடத்தப்படும் என கூறினார்.

தங்கதமிழ்செல்வன் சவால்

இதுகுறித்து தங்கதமிழ்ச்செல்வன் கூறும்போது, ‘‘என்னை பிடிக்காவிட்டால், கட்சியில் இருந்து நீக்குங்கள். கட்சியை பற்றி பேசியது உண்மைதான். அதற்கு என்னை அழைத்து கண்டித்திருக்க வேண்டியது தானே. சமூக வலைதளங்களில் என்னை பற்றி அவதூறு பரப்புவது வருத்தம் அளிக்கிறது. அமமுக நிர்வாகம் சரியில்லை என நான் பேசியது உண்மைதான். கோவை, நெல்லை மண்டல பொறுப்பாளர்களால் கட்சி அழிந்துவிட்டது’’ என்றார்.

தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி;

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுவதாவது; தங்களை சந்திப்பவர்கள் யார் என்பதை வெளியே சொல்வது நல்ல தலைமைக்கு அழகு அல்ல. அமைதியாக மனநிறைவோடு இருப்பது தான் தனது நிலைப்பாடு. தினகரனின் பண்பாடே மோசமாக உள்ளது. தனி ஒரு நபராக தினகரன் செயல்படுவதால் தான் கட்சியை விட்டு அனைவரும் செல்கின்றனர். வீடியோ வெளியிடுவது, ஆடியோ வெளியிடுவது நல்ல தமைமைக்கான பண்பல்ல.

மேலும் யார் கருத்தையும் தினகரன் ஏற்றுக்கொள்வதில்லை. கொள்கையே இல்லாத கட்சிக்கு கொள்கை பரப்பு செயலாளராக இருந்து பயன் என்ன எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 18 எம்.எல்.ஏ.க்கள் இல்லை என்றால் தினகரன் இல்லை. தினகரனை பார்த்து நான் ஏன் பெட்டிப்பாம்பாக அடங்க வேண்டும்?. எந்த இயக்கத்திலும் என்னை இணைக்க நான் முடிவு செய்யவில்லை; அவர்களும் பேசவில்லை என கூறியுள்ளார்.

Related Stories: