×

வரதட்சணை கேட்டு நிறைமாத கர்ப்பிணி மீது தாக்குதல்: காதல் கணவன் உட்பட 3 பேரிடம் விசாரணை

சென்னை: காசிமேடு இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜவேல் (26). கூலி தொழிலாளி. இவர், கடந்த ஓராண்டுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த வைதேகி (20) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது வைதேகி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த பணம் இல்லாததால், ராஜவேல், ‘‘உனது பெற்றோரிடம் சென்று ₹10 ஆயிரம் வாங்கி கொடு,’’ என மனைவியிடம் கூறியுள்ளார்.
ஆனால், அவர் வாங்கி தரவில்லை, என கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் ராஜவேல் மற்றும் அவரது தாய் லட்சுமி (48), சகோதரி சூரியா(27) ஆகியோர், வைதேகியை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில், அவர் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காசிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜவேல், லட்சுமி, சூரியா ஆகியோரை பிடித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

* திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு அரிவாளுடன் சுற்றித் திரிந்த திருவொற்றியூர் மல்லிகாபுரத்தை சேர்ந்த குட்டி (எ) பிரசாத் (30), மதன்குமார் (24) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
* சூடான் நாட்டை சேர்ந்த எல்மோத்ரேப் (21) என்பவர், பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். இவர், கடந்த 22ம் தேதி சோழிங்கநல்லூர் அருகே பைக்கில் சென்றபோது, மற்றொரு பைக் மோதி பலத்த காயமடைந்தார். அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
* திருமங்கலம் ஜெ.ஜெ.நகரில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த பிரபுகணேஷ் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* கொடுங்கையூர் ஓம்சக்தி விநாயகர் நகரை சேர்ந்த ராஜசேகர் (23), தனது நண்பர் சுரேஷ்குமார் (26) என்பவருடன், பைக்கில் நேற்று பாடி சிக்னல் அருகே சென்றபோது, மற்றொரு பைக்கில் திடீரென குறுக்கே வந்த கொளத்தூர் தாதங்குப்பத்தை சேர்ந்த சுரேஷ் (44), அவரது மனைவி சரிதா மீது மோதாமல் இருக்க பைக்கை வலது பக்கமாக திருப்பினார்.
அப்போது, சாலையோர தடுப்பு சுவரில் பைக் மோதியதில் ராஜசேகர் படுகாயமடைந்து உயிரிழந்தார். சுரேஷ்குமார் காயத்துடன் தப்பினார். பதற்றத்தில் சுரேஷ் மற்றும் அவரது மனைவி சரிதாவும் கீழே விழுந்து லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
* வில்லிவாக்கத்தை சேர்ந்த பிரபாகர் (23) என்பவரை தாக்கி, அவரது செல்போனை பறித்து சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்த கோயம்பேடு பகுதியை சேர்ந்த முரளி (23) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
* பரங்கிமலை அருகே நேற்று தண்டவாளத்தை கடக்க முயன்ற சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் மீது ரயில் மோதியதில் இறந்தார். இவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என மாம்பலம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* கொடுங்கையூர் எம்.ஆர்.நகரை சேர்ந்த சுப்பிரமணி (63) நேற்று முன்தினம் மாலை பைக்கில் சோழவரம் அடுத்த வண்டி பண்டிகாவனூர் அருகே சென்றபோது, கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
* காசிமேடு கடற்கரை புதிய வார்ப்பு பாலம் அருகில் சடலமாக கிடந்த சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை போலீசார் கைப்பற்றி விசாரிக்கின்றனர் .
* தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்கம், அஞ்சுகம் தெருவை சேர்ந்த விசுவநாதன் (29) என்பவர் நேற்று முன்தினம் இரவு தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள டாட்டூ போடும் கடைக்கு குடிபோதையில் சென்று, தனக்கு டாட்டூ போடும்படி கூறியுள்ளார். மது போதையில் இருந்ததால் ஊழியர்கள் டாட்டூ போட மறுத்தனர். அப்போது, ஏற்பட்ட தகராறில் கடை ஊழியர்கள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், மனமுடைந்த விசுவநாதன் வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலை  அம்பேத்கர் நகர் பழைய விமான தளம் அருகே டீ கடை மற்றும் மளிகை கடை நடத்தி  வருபவர் பூலோக பாண்டியன் (45). சோழவரம் ஒன்றிய பாஜ பிரமுகர். கடந்த 23ம்  தேதி மாலை போதையில் வந்த 4 பேர், இவரது கடையில் பொருட்களை வாங்கிவிட்டு, பணம் தராமல் தகராறில் ஈடுபட்டனர். கடையையும் சூறையாடினர். இதுதொடர்பாக, சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, செங்குன்றம் காந்தி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர்களான ராஜசேகர் (30), குமரன் (48), ரஞ்சித்குமார் (29), மனோஜ் (22) ஆகியோரை கைது செய்தனர்.
* வியாசர்பாடி இ.எச்.சாலையில் சுதர்சனம் என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை 4 பேர் இந்த கடையில் நுழைந்து சுதர்சனத்தை சரமாரி தாக்கிவிட்டு 4 சவரன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர். புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

போக்சோவில் வாலிபர் கைது
சேலையூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கருணாகரன் (26). திருமணமான இவர், அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்துள்ளார். பின்னர், தனக்கு திருமணம் நடந்ததை மறைந்து, சில நாட்களுக்கு முன் சிறுமியை 2வது திருமணம் செய்துள்ளார். பின்னர் கோவை, திருப்பூர் என அவருடன் சுற்றியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து, போக்சோ சட்டத்தின் கீழ் கருணாகரனை நேற்று கைது செய்தனர். சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.



Tags : Dowry,attack , pregnant, woman
× RELATED திருப்பூரில் சாலையோர தள்ளுவண்டி...