×

புதுவை அமைச்சர்கள் அலுவலக செலவு விஜிலென்ஸ் விசாரணைக்கு கவர்னர் அதிரடி உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சர்களின் அலுவலகங்களுக்கு சார்பு நிறுவனங்கள் நிதி செலவிட்ட விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக கவர்னர் கிரண்பேடி அதிரடியாக தெரிவித்துள்ளார். புதுச்சேரி அமைச்சர்கள் அலுவலக தேவைக்கான பொருட்களை துறை சார்ந்த அரசு பொது நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியவற்றில் வாங்கி வருகின்றனர். இதுகுறித்து ராஜிவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி, இந்திய தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக கேள்விகளை எழுப்பியிருந்தார். சில நிறுவனம் கொடுத்த தகவலின்படி, வருவாய்த்துறை அமைச்சர் அலுவலகத்துக்கு, பிப்டிக் நிறுவனத்தில் இருந்து, ஸ்டேஷனரி பொருட்கள், இருக்கைகள், ஸ்டவ், ஏணி, வேக்யூம் கிளீனர் என ₹3 லட்சத்து 16 ஆயிரத்து 151-க்கு பொருட்கள் வாங்கியுள்ளதாக தகவல் அளித்துள்ளனர்.

 அதேபோல் சமூக நல அமைச்சர் கந்தசாமி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு தேனீர் உபசரிப்பு செய்ததற்கு2018ம் ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரை நான்கு மாதங்களுக்கு பாட்கே நிறுவனம் மூலமாக ₹15 ஆயிரத்து 980 செலவு செய்துள்ளனர்.  அமைச்சர்களின் அலுவலகத்துக்கு, இதுபோன்ற பொருட்களை அமைச்சரவை அலுவலகமே வழங்கி வரும் நிலையில், அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக வாங்க வேண்டிய அவசியம் என்ன? இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு செலவினங்கள் ஏற்படுகிறது. எனவே இவ்விஷயத்தில் முதல்வர் நாராயணசாமி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியிருந்தார். இந்த மனுவை கவர்னர், முதல்வர், தலைமை செயலருக்கு அவர் அனுப்பியிருந்தார்.

 இந்தநிலையில் இவ்விவகாரம் தொடர்பாக கவர்னர் கிரண்பேடி நேற்று சமூக வலைதளத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், யார் சட்ட விதிகளை மீறினாலும் அவர்கள் அதற்கான பதிலை கூற பொறுப்புடையவர்களே. கிடைத்த தகவல்களை வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சட்ட விதிகளை மீற உதவிபுரிந்த அரசு அதிகாரிகளும் இதற்கு பதில் கூறியாக வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.



Tags : New Ministers, Governor's, Vigilance, Inquiry
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...