லவசாவின் அதிருப்தி குறித்த தகவலை வெளியிட ஆணையம் மறுப்பு

புதுடெல்லி: தேர்தல் ஆணையர் அசோக் லவசா தெரிவித்த அதிருப்தி தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தர தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.மக்களவைத் தேர்தலின் போது பிரதமர் மோடி, அமித்ஷாவின் சர்ச்சை பேச்சுகளுக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற புகார் எழுந்தது. தேர்தல் ஆணையர்களில் ஒருவரான லவசாவும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தேர்தல் விதிமீறல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட இரண்டு ஆணையர்கள் சேர்ந்து முடிவெடுப்பதால் அதுவே பெரும்பான்மை முடிவாகி விடுவதாகவும் தனது ஆலோசனை, கருத்து ஏற்கப்படுவதில்லை என்றும் லவசா குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், சட்ட ஆர்வலர் விகார் துர்வே தேர்தல் ஆணையர் அசோக் லவசா தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தெரிவித்த கருத்துகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார். இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், இச்சட்டத்தின் பிரிவு 8(1)ஜி-ன் படி, எந்தவொரு நபரின் உயிருக்கோ அல்லது பாதுகாப்பிற்கோ ஆபத்து விளைவிக்கும் அல்லது ரகசியத் தகவலின் பாதுகாப்புக்கு களங்கம் ஏற்படும் என்றால், அத்தகவல்களை வெளியிட விலக்கு அளிக்கப்படுகிறது என்பதை சுட்டிக் காட்டி தகவல் வழங்க ஆணையம் மறுத்து விட்டது.

Related Stories: