புதுடெல்லி: ‘மழையின் அளவு, அணைக்கான நீர்வரத்தை பொறுத்து தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான 40.43 டிஎம்சி நீரை திறந்து விட வேண்டும்,’ என கர்நாடகா அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மழுப்பலான உத்தரவை பிறப்பித்துள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம், அதன் தலைவர் மசூத் உசேன் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுவை மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழகம் சார்பில் பொதுப்பணித் துறை செயலாளர் பிரபாகர், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்ரமணியம், திருச்சி மண்டல பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், தமிழகம் சார்பில் கூறப்பட்டதாவது:தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடகா திறந்து விடாததால், இந்தாண்டு டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12ம் தேதி நீர் திறக்க முடியாமல் போய் விட்டது. மேலும், மேட்டூர் அணையின் நீர் மட்டமும் வெகுவாக குறைந்து விட்டது. ஜூன் மாத பங்கீடான 9.19 டிஎம்சி தண்ணீரை இந்த மாதத்திற்குள் காவிரியில் இருந்து கர்நாடகா திறந்து விட வேண்டும். ஆனால், ஆணைய உத்தரவை அம்மாநில அரசு தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகிறது. ஜூலை மாத பங்கீடு 31.24 டிஎம்சி நீரை, இந்த மாதம் போல் தாமதம் செய்யாமல் கெடுவிற்குள் திறந்து விட உத்தரவிட வேண்டும். மத்திய நீர்வளக் குழுமத்தில் இருந்து காவிரி நீர் தேக்கங்களை கண்காணிக்க தகுதி வாய்ந்த பொறியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். காவிரி நீர் முறைப்படுத்துதல் (ஒழுங்காற்று குழுவின்) தலைமையகம் பெங்களூருவில் இருப்பதால், அடுத்த கூட்டங்களை அங்கு நடத்த திட்டமிட வேண்டும் என்று கூறப்பட்டது.