பெண்ணை ஆபாசமாக திட்டியதை கண்டித்ததால் பிரியாணி கடைக்காரருக்கு கண்ணாடி டம்ளர் குத்து: விமான நிலைய கேன்டீன் ஊழியர் கைது

சென்னை: சூளைமேடு பெரியார் பாதையை ேசர்ந்தவர் செல்வம் (50). அதே பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை இந்த கடைக்கு பக்கத்தில் உள்ள டீ கடைக்கு வந்த போதை ஆசாமி ஒருவர், ₹500 கொடுத்து சிகரெட் கேட்டுள்ளார். அதற்கு கடையில் இருந்த சித்ரா, என்னிடம் சில்லரை இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமி, சித்ராவை ஆபாசமாக திட்டியுள்ளார். இதை பார்த்த பிரியாணி கடை உரிமையாளர் செல்வம், அவரை தட்டிக் கேட்டுள்ளார்.

இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த போதை ஆசாமி, டீ கடையில் இருந்த கண்ணாடி டம்ளரை எடுத்து உடைத்து செல்வத்தை சரமாரியாக குத்தினார்.  இதில் பலத்த காயமடைந்த செல்வத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து சூளைமேடு போலீசார் வழக்கு பதிந்து, வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த மோகன் (42) என்பவரை நேற்று கைது செய்தனர். இவர், சென்னை விமான நிலையத்தில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: