அமராவதி: ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை அந்த மாநில அரசு குறைத்துள்ளது. மக்களவை தேர்தலுடன் நடைப்பெற்ற ஆந்திர மாநிலத்தின் சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 150க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிப் பெற்றது. இதனையடுத்து மாநில முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்று அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கிடையே, மக்களவை தேர்தலிலும் மொத்தமுள்ள 25 இடங்களில் 22 இடங்களில் வெற்றிப் பெற்று வாகை சூடியது. இதன் மூலம் பாராளுமன்றத்தில் நான்காவது மிகப்பெரிய பலம் வாய்ந்த கட்சியாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உயர்ந்தது.
ஆனால், அங்கு பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வியை தழுவியது. இந்நிலையில், அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ‘சட்டம் அனைவருக்கும் பொதுவானது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் அனைவரும் அதை மதிக்க வேண்டும் என்றார். இந்நிலையில், முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, அவரது மகன் மற்றும் முன்னாள் மாநில மந்திரியுமான நர லோகேஷ் ஆகியோருக்கு இனி 2+2 துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் மட்டுமே பாதுகாப்பு எனவும், இசட் பிரிவு பாதுகாப்பு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, தேர்தல் தோல்வி குறித்து விஜயவாடாவில் நடந்த கட்சி கூட்டத்தில் பங்கேற்க வந்த சந்திரபாபு அங்கிருந்து மீண்டும் ஹைதராபாத் செல்வதற்காக விமான நிலையம் சென்றார். அப்போது Z+ வகை பாதுகாப்பின் கீழ் அவர் இருக்கும்போதிலும், அவரின் வாகனம் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை, மேலும் விமானத்தில் ஏற மற்ற பயணிகளுடன் விமான நிலைய பேருந்தில் செல்லும்படி அவரிடம் கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிரஜா வேதிகா கட்டிடம்:
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சியின்போது குண்டூர் மாவட்டம், உண்டவல்லியில் அவர் வாடகை எடுத்து தங்கியுள்ள வீட்டின் அருகே கிருஷ்ணா நதிக்கரை ஓரத்தில் பிரஜா வேதிகா என்னும் கட்டிடத்தை கட்டினார். இந்த கட்டிடத்தில் கலெக்டர்கள் மாநாடு, மக்கள் நலத் திட்ட உதவிகள் வழங்குவது, பொதுமக்களிடம் குறைகேட்கும் நிகழ்ச்சி போன்றவை நடைபெற்று வந்தது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிர்க்கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் தனது வீட்டின் அருகே உள்ள பிரஜா வேதிகா கட்டிடத்தை எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தனக்கு ஒதுக்க வேண்டும். இதன் மூலமாக தன்னை சந்திக்க வரக்கூடிய மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்களை பார்ப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் பிரஜா வேதிகாவில் நேற்று முதல் கலெக்டர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது ஜெகன்மோகன் ரெட்டி பேசியதாவது: கிருஷ்ணா நதிக்கரையையொட்டி நதி பாதுகாப்பு சட்டத்தை மீறியும், சுற்றுச்சூழல் மாசுபடுவதை கண்டுகொள்ளாமலும், பசுமை தீர்ப்பாயத்திற்கு எதிராக தற்போது நாம் கூட்டம் நடத்தக் கூடிய பிரஜா வேதிகா கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சாதாரண மக்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் கட்டிடம் இடிக்க கூடிய நிலையில் அரசே தவறு செய்து, ஊழல் செய்து கட்டப்பட்ட கட்டிடத்தில் இந்த கலெக்டர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. இன்றுடன் இந்த கட்டிடத்தை முழுவதுமாக இடித்து தரைமட்டமாக்க வேண்டும். இதேபோன்று மாநிலம் முழுவதும் முறைகேடாக சட்ட விதிகளுக்கு புறம்பாக ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டப்பட்டு இருந்தாலும் அவை அனைத்தையும் கலெக்டர்கள் முன்னிலையில் இடிக்க வேண்டும் என்றார்.