ராவல்பிண்டி: இந்தியாவில் கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத இயக்கத்தின் தலைவரான மசூத் அசார், சமீபத்தில் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டான். பாகிஸ்தானில் சுதந்திரமாக இருக்கும் இவன், உடல் நலக்குறைவு காரணமாக ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ‘டயாலிசிஸ்’ சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ராவல்பிண்டி மருத்துவமனையில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றதாகவும், இந்த தாக்குதலில் மசூத் அசார் உள்பட 10 பேர் காயம் அடைந்தாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, பாகிஸ்தானில் உள்ள பிரபல சமூக ஆர்வலரும், மனித உரிமைகள் ஆர்வலருமான ஆசன் உல்லா மியாகைல் என்பவர் தனது டுவிட்டர் பதிவில், ‘மசூத் அசார் காயம் அடைந்துள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.