காதலனை நம்பி வீட்டைவிட்டு வெளியேறியதால் விபரீதம் சிறுமியை அறையில் அடைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்: 2 இன்ஜினியரிங் மாணவர்கள் உட்பட 4 பேர் கைது

திருமலை: காதலனை நம்பி வீட்டில் இருந்து வெளியேறிய சிறுமியை 6 பேர் கும்பல் வீட்டில் அடைத்து வைத்து 4 நாட்களாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் 2 இன்ஜினியரிங் மாணவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம், குண்டூரைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அங்குள்ள  பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிரகாசம் மாவட்டம், ஓங்கோலில் உள்ள உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது தாத்தாவை பார்க்க சென்றார்.  அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் தங்கியிருந்து தாத்தாவை கவனித்து வந்தார். மருத்துவமனைக்கு அடிக்கடி வந்த ராம் என்ற டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த பெற்றோர், மகளை  கண்டித்து தங்கள் ஊருக்கு வரவழைத்தனர். ஆனால் இருவரும் செல்போனில் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். இதையறிந்த அவரது பெற்றோர், சிறுமியை கடுமையாக எச்சரித்துள்ளனர். இதை சிறுமி, தனது காதலனுக்கு தெரிவித்தார்.  இதையடுத்து ராமு, நீ அங்கிருக்க வேண்டாம்.  ஓங்கோலுக்கு வந்துவிடு என சிறுமியிடம் தெரிவித்தார். அதன்படி கடந்த 5 நாட்களுக்கு முன்பு சிறுமி ஓங்கோல் சென்றார். அங்குள்ள ஒரு கடையில் இருந்தபடியே காலை 9 மணி முதல் மாலை வரை போன் செய்தும் ராம் போனை எடுக்கவில்லையாம். என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே தவித்து நின்றார். இதை பார்த்த கடையில் வேலை பார்த்த பாஜி என்ற மாற்றுத்திறனாளி, சிறுமியிடம் மெல்ல பேச்சு கொடுத்து நடந்ததை கேட்டறிந்தார். பின்னர் பாஜி, ராமு எனது நண்பன்தான். நான் அவனிடம் உன்னை அழைத்து செல்கிறேன் எனக்கூறி தனது நண்பன் ஆகாஷின் வீட்டிற்கு அழைத்து சென்றான்.

பின்னர் சிறுமியை அவரது வீட்டில் அடைத்து வைத்து ஆகாசும், பாஜியும் பாலியல் பலாத்காரம் செய்தனராம். தொடர்ந்து 2 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, சிறுமியை அருகில் உள்ள இன்ஜினியரிங் மாணவர்கள் தங்கியிருந்த அறைக்கு அழைத்துச்சென்று அடைத்து வைத்தனர். அங்கு பாஜி, ஆகாசுடன் சேர்ந்து மேலும், 4 மாணவர்கள் சிறுமியை 2 நாட்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனராம். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, யாரும் இல்லாதபோது தப்பி ஓங்கோல் பஸ் நிலையம் வந்தார். அங்கு தனியாக அழுது கொண்டிருந்த சிறுமியை பார்த்த பஸ் நிலைய கண்காணிப்பாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் சிறுமியிடம் விசாரணை செய்தனர். அப்போது சிறுமி நடந்ததை கூறினார். இதுகுறித்து ஓங்கோல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூட்டு பலாத்காரம் செய்த பாஜி, ஆகாஷ் மற்றும் 2 இன்ஜினியரிங் மாணவர்கள் உட்பட 4 பேரை கைது செய்தனர். மேலும் காதலித்து ஏமாற்றிய டிரைவர் ராமுவையும், தலைமறைவான மேலும் 2 மாணவர்களையும் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக ஓங்கோலில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: