கொள்ளிடம் அருகே இடிந்து விழும் அபாயத்தில் பொதுப்பணித்துறைக் கட்டிடங்கள்

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே புத்தூரில் இடிந்து விழும் அபாயத்தில் உள்ள 3 பொதுப்பணித்துறை கட்டிடங்களை அகற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரில் புதுமண்ணியாறு பிரதான பாசன வாய்க்க்கால் கரையில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான 3 குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. கடந்த 20 வருடங்களுக்கு முன்பு,  பொதுப்பணித்துறையின் ஊழியர்கள் இந்தக் கட்டிடத்தை தங்குவதற்கு பயன்படுத்தி வந்தனர். பாசன வாய்க்கால்களில் அதிக தண்ணீர் வந்தபோது, பாசனத்திற்கு நீரை முறைப்படுத்தி வழங்கும் வகையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த  ஊழியர்கள் இக்கட்டிடத்தில் தங்கியிருந்தனர்.

பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து குன்றியும் பயிரிடும் நிலப்பரப்பும் குறைந்து வந்ததால் பொதுப்பணித்துறையில் ஆள்குறைப்பு செய்யப்பட்டது. இதனால் ஊழியர்களின் எண்ணிக்கை மிகவும்  குறைந்தது. அதிலிருந்து அரசு குடியிருப்புகள் காலியாகிவிட்டன.

இந்த கட்டிடங்கள் சிதிலமடைந்து, கட்டிடங்களைச் சுற்றி புதர் மண்டி விஷப்பூச்சிகள் பெருகி வருகிறது. புதுமண்ணியாறு பாசன வாய்க்காலின் வலதுகரையிலும், தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்திலும் எந்த பயனுமின்றி இடிந்து விழும்  நிலையில் உள்ள 3 குடியிருப்பு கட்டிடங்களையும் இடித்து அகற்ற பொதுப்பணித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: