நெல்லை: நெல்லையில் டிக்..டாக்... மூலம் காதலில் விழுந்த ஜோடி, காதலி திருமணமானவர் என தெரிந்ததால் விஷம் குடித்தார். அவரை பார்க்கவந்த காதலி பஸ் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாளை இலந்தைகுளம் மாரியம்மன் கோயில் தெரு அருள்செல்வம் மகன் மரியபுஷ்பராஜ்(22). சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வந்தார். இவருக்கு செல்போனில் டிக்டாக் பார்க்கும் பழக்கம் உண்டு. அதில் நன்றாக பாட்டுக்கு வாய் அசைத்து டான்ஸ் ஆடிய பெண்கள் வந்தால், அதை வரவேற்று இவர் லைக் போடுவாராம்.இந்நிலையில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் டான்ஸ் ஆட்டத்தை பார்த்து அந்த பெண்ணுக்கு மரியபுஷ்பராஜ் லைக்போட பதிலுக்கு அவரும் நன்றி தெரிவித்து லைக் போட்டுள்ளார்.
இவர்கள் டிக்டாக் பழக்கத்தால் 6 மாதத்திற்கு முன் அவர்களிடையே காதல் ஏற்பட்டது. திடீரென்று ஒருநாள் மரியபுஷ்பராஜ் அந்த பெண்ணுக்கு லைக் போட்டுள்ளார். அதில், உங்கள் நடனம் நன்றாக உள்ளது. அதை நாள் முழுக்க பார்த்துக்கொண்டு இருக்கவேண்டும்போல் இருக்கிறது என்று ஜெள்ளு விட்டுள்ளார். இதை அறிந்த அந்த பெண்ணும், நீங்களும் பாட்டுக்கு நன்றாக வாய் அசைத்து ஆடுகிறீர்கள். உங்கள் ஆட்டம் பாட்டமும் எனக்கு பிடித்துள்ளது என அவரும் லைக் போட்டுள்ளார்.
இப்படி இருவரும் மாற்றி மாற்றி லைக் போட அதன்பிறகு செல்போன் மூலம் பேசத்தொடங்கினர். அப்போது அந்த பெண் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த சங்கீதா(20) என தெரியவந்தது. அதன்பிறகு அவர்கள் மனம் விட்டு பேசினர். தினமும் இருவரும் போனில் பேசாமல் இருக்கமாட்டார்கள்.காதல் நெருக்கத்தால் கட்டுண்ட அவர்கள் காதல் வானில் சிறகடித்து பறந்தனர். மரியபுஷ்பராஜ் காதலியை பார்க்க அடிக்கடி திருமங்கலம் சென்றுவிடுவார். அங்கு பல இடங்களில் சுற்றி திரிந்துள்ளனர். அதுபோல் காதலி சங்கீதாவும் காதலனை பார்க்க பஸ் பிடித்து நெல்லை வந்துவிடுவார். இவர்களின் காதல் நெருக்கத்தால் சங்கீதா கர்ப்பிணி ஆனார். 5 மாதம் ஆகிவிட்டதால் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். மரியபுஷ்பராஜூம் அவர் மீது உயிரையே வைத்திருந்ததால் திருமணத்திற்கு சம்மதித்துள்ளார். இதுகுறித்து அவர் பெற்றோரிடம் தெரிவித்தார். முதலில் அந்த பெண் யார், எப்படிபட்டவர், அவர் குடும்ப பின்னணி என்ன? என விசாரிப்போம், நல்ல பெண்ணாக இருந்தால் திருமணம் செய்துவைக்கிறோம் என பெற்றோர் கூறியிருக்கிறார்கள்.பெற்றோரும், மரியபுஷ்பராஜிம் சங்கீதா பற்றி ரகசிய விசாரணையில் இறங்கினர். சங்கீதாதான் தனது மனைவி என்று கற்பனை உலகில் மிதந்துகொண்டிருந்த மரியபுஷ்பராஜூக்கு அந்த செய்தி பேரிடியாக வந்தது. சங்கீதா ஏற்கனவே திருமணமானவர் என்றும் ஒரு குழந்தை இருப்பதும் தெரியவந்தது. இதையறிந்து மரியபுஷ்பராஜிக்கு உலகமே இருண்டுபோய் விட்டது. நாம் காதலித்து, திருமணம் செய்ய இருந்த பெண் வேறு ஒருவரின் மனைவியா? என அவரால் தாங்கமுடியவில்லை. அந்த அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாத அவர் நேற்று திடீரென வீட்டில் வைத்து விஷம் குடித்தார். உடனே அவரை பாளை ஐகிரவுண்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது நிலைமை மோசமாக உள்ளது. காதலன் விஷம் குடித்த செய்தி எப்படியோ சங்கீதாவிற்கு தெரிந்துவிட்டது. உடனடியாக அவர் திருமங்கலத்திலிருந்து ஐகிரவுண்ட் மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். இங்கு காதலன் மயங்கிய நிலையில் இருப்பதை பார்த்த அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார். அதன்பிறகு அங்கிருந்து வெளியேறிய அவர் நேராக புதிய பஸ் நிலையம் வந்தார். அங்கு ஓரிடத்தில் அமர்ந்து தான் ஏற்கனவே வாங்கி வந்த விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். அப்போது பஸ் ஏற வந்த பயணிகள் சிலர்பார்த்து விட்டு, ஏன் இந்த பெண் இப்படி கிடக்கிறார். ஆளை பார்த்தால் வசதியான பெண் மாதிரி தெரிகிறது...அய்யோ பாவம்... என்றபடி அங்குள்ள கடையில் சோடா வாங்கி முகத்தில் தெளித்துள்ளனர். ஆனால் அவர் கண்திறந்து பார்க்கவில்லை. அப்போதுதான் சங்கீதா விஷம் குடித்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பஸ் நிலைய போலீசாரிடம் தெரிவித்தனர். அவர்கள் சங்கீதாவை மீட்டு ஐகிரவுண்ட் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது நிலைமையும் மோசமாக உள்ளது.இதுகுறித்து பாளை பெருமாள்புரம் போலீசாரும், மேலப்பாளையம் போலீசாரும் தனித்தனியாக வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்கள். காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.