குடிநீர் கூட கிடைக்காததால் மழை வேண்டி சிறுவர்களை சடலம் போல் வைத்து நூதன வழிபாடு

கண்ணமங்கலம்: தமிழகத்தில் பருவழை பொய்த்ததால் கடும் வறட்சி ஏற்பட்டு பொதுமக்கள் குடிநீருக்காக அல்லல்பட்டு வருகின்றனர். மழை வேண்டி தங்களது மத சம்பிராதயங்களின்படி ஆங்காங்கே பல்வேறு பூஜைகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அடுத்த விளாங்குப்பம் கிராம மக்கள் நேற்று மழை வேண்டி நூதன வழிபாடு செய்தனர். இதற்காக அருகே உள்ள வனப்பகுதிக்கு நடைபயணமாக சென்றனர். அடர்ந்த வனப்பகுதியில் மழை வேண்டி மாரியம்மனுக்கு களி, கருவாட்டு குழம்பு படையலிட்டு சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து, சிறுவர்களை சடலம்போல கிடத்தி, மழையின்றி மனிதர்கள் மடிகிறார்கள் எனக்கூறி ஒப்பாரி வைத்து அழுதனர். பின்னர், வனதேவதை, வருண பகவானுக்கு தனித்தனியே வழிபாடுகள் நடத்தினர். அப்போது, சிலருக்கு அருள் வந்து மழை பொழியும் என கூறினர். தொடர்ந்து அனைவருக்கும் களி, கருவாட்டு குழம்பு விருந்து வழங்கப்பட்டது.

குளித்தலை அருகே மழை வேண்டி அரசு, வேப்ப மரங்களுக்கு கல்யாணம்

குளித்தலை: தமிழகத்தில்  நிலவிவரும் கடும் வறட்சியால் பொது மக்கள் குடிநீரின்றி பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தண்ணீரை தேடி குடங்களுடன் மக்கள் அலைகின்றனர்.  இந்நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த வை.புதூர் கிராமத்தில் மழை வேண்டி பகவதி அம்மன் கோவில் அருகே உள்ள அரச, வேப்ப மரங்களுக்கு கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது. முதலில் விநாயகர் பூஜை நடந்தத. அதனை தொடர்ந்து பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இறுதியாக அரசமரம், வேப்ப மரங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பூ மாலை வஸ்திரம் அலங்காரம் செய்து கல்யாணம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: