ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே உள்ள கிராமத்தில் சாக்கடையின் ஓரத்தில் ஒழுகும் ஒழுகு தண்ணீரை இரவு, பகல் பாராமல் காத்திருந்து பிடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. ஆண்டிபட்டி அருகே உள்ள கதிர்நரசிங்கபுரத்தில் ஆழ்துளைக் கிணறுகள் மூலமாக ஊராட்சி நிர்வாகத்தினர் குடிநீர் வழங்கி வந்தனர். மேலும் குடிநீர் பஞ்சத்தை சமாளிக்க குன்னூர் - வைகை கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக தண்ணீர் வழங்கி வந்தனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் போதிய மழையில்லாததால் 80 அடியில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் 800 அடிக்கு கீழ் சென்றுவிட்டது.
இதனால் குடியிருக்க அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணறுகளில் நீர் குறைந்து பழுது ஏற்பட்டதால் குடிநீரின்றி மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சாக்கடையின் ஓரத்தில் உப்பு தண்ணீர் குழாயில் ஒழுகும் தண்ணீரை இரவு பகல் பாராமல் நீண்ட நேரம் காத்திருந்து பிடித்து வருகின்றனர். இதனால் ஒரு சில நேரங்களில் சாக்கடை நீரும் கலந்து பிடித்து விடுவதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளதாகவும், இதற்கு நிரந்தரமான தீர்வு காண வேண்டும் என்று கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.