எத்தியோப்பியாவில் அரசியல் கலவரம் ராணுவ தளபதி சுட்டுக்கொலை

அடிஸ் அபாபா: எத்தியோப்பியாவில் நேற்று நடந்த அரசியல் கலவரத்தில் ராணுவ தளபதி, மண்டல தலைவர் உட்பட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவில், மொத்தம் 80 இனத்தவர்கள் உள்ளதால், அரசியல் தொடர்பாக இவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்படும். இதனால் பலர் இடம் பெயர்ந்தனர். அதன்பின் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பிரதமரான அபி அகமது,  பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்தார். இதற்கு முதலில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இவர் அடுத்தாண்டு தேர்தல் நடத்த திட்டமிட்டார். இது உள்ளூர் அரசியலில் மீண்டும் மோதலை ஏற்படுத்தியது. இந்நிலையில், அம்ஹாரா பகுதியில் உயர் அதிகாரிகளின் கூட்டம் நேற்று நடந்தது. இங்கு அம்ஹாரா பிரிவு பாதுகாப்பு தலைவர் அசாமிநியூ சிகே தலைமையில் ஒரு கும்பல், உயர் அதிகாரிகள் கூட்டம் நடந்த இடத்துக்கு வந்து துப்பாக்கிச்சூடு  நடத்தியது. இதில் படுகாயம் அடைந்த 2 பேர் பலியாயினர்.  

இவர்களில் முக்கியமானவர் மண்டல தலைவர் அம்பாசீவ் மெகோனன். அம்ஹாராவில் மண்டல ஆட்சியை அகற்றும் முயற்சியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த தாக்குதல் நடந்த சில மணி நேரத்தில் எத்தியோப்பியாவின் ராணுவ தளபதி சியாரே மெகோனன் என்பவரை அவரது வீட்டில் வைத்து மெய்க்காப்பாளரே சுட்டுக் கொன்றார். இவரை சந்திக்க வந்திருந்த முன்னாள் ராணுவ தளபதியும்  சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த இரு தாக்குதலுக்கும் உள்ள தொடர்பு உடனடியாக தெரியவில்லை.

Related Stories: