சியோல்: ‘அமெரிக்க அதிபர் டிரம்ப் அனுப்பிய தனிப்பட்ட கடிதத்தில் நல்ல செய்தி வந்திருக்கிறது,’ என வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையே வியட்நாமில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த அணு ஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வடகொரியா தனது அணு ஆயுதத்தை முழுமையாக அழித்தால் மட்டுமே பொருளாதார தடைகள் விலக்கிக் கொள்ளப்படும் என அதிபர் டிரம்ப் நிபந்தனை விதித்தார். ஆனால், ‘அணு ஆயுதங்கள் படிப்படியாக மட்டுமே அழிக்கப்படும். அதனால், பொருளாதார தடைகளையும் படிப்படியாக விலக்கிக் கொள்ள வேண்டும்’ என கிம் கூறினார். இதனால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து, இரு தரப்பு உறவில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலை நீடிக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனைகளை ஆரம்பித்து விட்டது. இதனால், வடகொரியா மீண்டும் பழைய நிலைக்கு சென்று விடுமோ என கொரிய தீபகற்பத்தில் பீதி நிலவுகிறது.